பொத்தேரியில் பயங்கரம்.. வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து.. சாலையை கடக்க முயன்ற 6 பேர் மரணம்
செங்கல்பட்டு: பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை திருச்சி தேசிய சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பல இடங்களில் முறையான சிக்னல் உள்ளிட்டவை வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகள் உள்ளிட்ட, ஏராளமானோர் அங்கு வருவது வழக்கம். இதன் காரணமாக அந்த பகுதி எப்பொழுதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படும்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி பகுதியில், அதிவேகமாக தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அங்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இரண்டு இரு சக்கர வாகனத்தையும் வேகமாக மோதியது.
நொடிப்பொழுதில் நிகழ்ந்த விபத்தில் டிப்பர் லாரி அங்கு இருந்த டிவைடரில் மோதி , அதனை அடுத்து மரத்திலும் மோதியது. மரத்தில் மோதியதில், மரம் முறிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் , லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அங்கு பேருந்து நிறுத்தத்திற்காக காத்திருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி அறிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications