பஸ் ஓடுச்சா.. திடீர்னு படிக்கட்டு கழன்டுருச்சு... 3 மாணவர்கள் காயம் - சென்னையில் அவலம்!
சென்னை: சென்னையில் மாநகர பேருந்து ஒன்றில் படிக்கட்டு உடைந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
சென்னையில் நேற்று வள்ளலார் நகரில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற 56 என் மாநகர பேருந்தில் கைப்படி கழந்து விழுந்து லட்சுமி என்ற பயணி தலையில் காயமடைந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த லட்சுமிக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே இன்று மற்றொரு பேருந்தின் படிக்கட்டு கழன்று விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஆவடியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற 266 எண் கொண்ட மாநகர பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமானோர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இந்தப் பேருந்து பம்மல் அருகே குண்டும் குழியுமான சாலையில் வந்த போது, சாலையின் பள்ளத்தில் சிக்கிய பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் தவறி கீழே விழுந்தனர். சிலர் பேருந்தைப் பிடித்தபடி தொங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனடியாக டிரைவர் பேருந்தை நிறுத்தியதால் அவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்த 3 பேருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications