'லே'வுக்கு பைக்கில் சென்ற சென்னை அதிகாரி...மனைவியின் கண் முன்னே மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
சென்னை : 'எல் அண்ட் டி'யில் துணைப் பொறியியியல் மேலாளராக பணிபுரியும் ஆதித்ய குமார் லே பகுதிக்கு பைக்கில் சென்றுவிட்டு திரும்புகையில் மர்ம நபர்களால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
31 வயது ஆதித்யகுமார் ராமாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். எல் & டி நிறுவனத்தில் துணை பொறியியல் மேலாளராக பணியாற்றும் ஆதித்ய குமாருக்கும், அதே நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் விஜயலட்சுமிக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளனர்.
அங்கு அவர்களின் நண்பர் ஷ்யாம் தேஜாவுடன் சேர்ந்து இரண்டு என்பீல்டு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு டெல்லியில் இருந்து 1000 கி.மீட்டர் தொலைவில் உள்ள லே மற்றும் லடாக் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். இயற்கை அழகை சுற்றி பார்த்து விட்டு அவர்கள் திரும்பிய போது மர்ம நபர்கள் ஆதித்தயாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பைக்கில் விரட்டி துப்பாக்கிச் சூடு
விஜயலட்சுமி, ஆதித்யாவின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளார். சம்பவம் குறித்து தெரிவித்துள்ள விஜயலட்சுமி " பைக்கில் நாங்கள் டெல்லி திரும்புகையில் எங்களைக் கடந்து சென்ற பைக்கில் இருந்த மர்ம நபர்கள் 32 கிலோமீட்டர் எங்களை விரட்டினர். ஒரு கட்டத்தில் எங்கள் அருகில் வந்தவர்கள் ஆதித்யாவின் இடது தாடை பக்கம் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு நானும், ஷியாமும் சாட்சிகள்" என்றார்.

மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து ஆதித்த குமாரை முசாபர் நகரில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள மீரட்டில் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தோம். ஆதித்தய குமார் உயிர் பிழைத்துவிடுவார் என்று நம்பிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மர்மம்
ஆதித்ய குமாரை சுட்டுவிட்டு தப்பியோடியவர்கள், தலையில் ஹெல்மெட் மாட்டியிருந்ததால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று விஜயலட்சுமி கூறியுள்ளார். மேலும் வண்டியின் எண்ணை குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை
ஆதித்த குமார் கொலை தொடர்பாக ஷியாம் மற்றும் அவரது உறவினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஆதித்ய குமார் சுட்டுக் கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் இருப்பதால் இதில் வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.












Click it and Unblock the Notifications