சென்னை குண்டுவெடிப்பு: கைதான பாகிஸ்தான் உளவாளியிடம் விடிய விடிய விசாரணை
சென்னை: சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேனிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் கடந்த 30ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை தளங்களை குண்டு வைத்து தகர்க்க அவர் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் அவர் கைதான மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்ததில் ஸ்வாதி பரச்சூரி என்ற இளம்பெண் பலியானார்.
இந்நிலையில் ஜாகீர் உசேனை க்யூ பிரிவு போலீசார் 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்துள்ளனர். சென்னை குண்டுவெடிப்பு குறித்து அவரிடம் நேற்று இரவில் இருந்து விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை என்று மட்டுமே தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான அந்த வழுக்கைத் தலை நபரின் வீடியோவை ஜாகீரிடம் காண்பித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலரின் தூண்டுதலால் தான் ஜாகீர் தமிழகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் க்யூ பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளான அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோருடன் ஜாகீர் உசேன் நெருக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜாகீரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாகீரின் கூட்டாளிகள் 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இது போல இன்னும் எத்தனை பேர் சென்னையில் உள்ளார்கள் என்றும் ஜாகீரிடம் விசாரிக்கப்படுகிறது.
ஜாகீரிடம் க்யூ பிரிவு போலீசார் வரும் 8ம் தேதி வவரை விசாரணை நடத்துகிறார்கள். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்து தான் குண்டுவெடிப்பு வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை தொடர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications