குண்டு வெடிப்பில் பலியான ஸ்வாதி… உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த ஸ்வாதியின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் கதறியழுத சம்பவம் காண்பவர்கள் நெஞ்சை உருக்கவதாக அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்தார்.
ஸ்வாதி ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் ராமகிருஷ்ணன் காமாட்சி என்று தெரியவந்ததும், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்வாதியின் உடல் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை மதியம் அவர்கள் சென்னைக்கு வந்தனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஸ்வாதியின் உடல் ஸ்ரீநகருக்கு எடுத்துச் செல்வதற்காக தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.