விடாமல் தொடரும் சாரல்.. ஊட்டியை விட குளிர்ந்து நடுங்கும் சென்னை!
சென்னையின் பெரும்பாலான பகுதிகள் சாரலும் தூறலுமாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகள் மழை, சாரல், லேசான தூறல் மற்றும் கடும் குளிருடன் ஊட்டி போன்றுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து நேற்று காலை வரை கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது
ஆனால் சென்னையை பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் மழை கட்டுக்குள் தான் உள்ளது. இரவு முழுவதும் பெய்த மழை விடிந்த பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது. பின்னர் மீண்டும் தொடங்கிய மழை சாரல் மழையாக நீடிக்கிறது.

பகலில் சுள்ளென வெயில்
நேற்று பகல் நேரத்தில் சுள்ளென வெயில் காய்ந்தது. இதனால் சென்னைக்கு மழை அவ்வளவுதானோ என்று தோன்றியது. ஆனால் அதற்கு நேர்மாறாக இன்று முழுவதும் சாரலுடனே தொடர்கிறது.

வெயிலும் மழையும்
சென்னை மாநகர் புறநகர் பகுதிகளில் முழுவதும் பரவலாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் சாரல் மழையும் பெய்து வருகிறது.

குளிரில் மாநகர்
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி நகர், சூளைமேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கொரட்டூர், ராமாபுரம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நகர் முழுவதும் குளிர் நிலவி வருகிறது.

புறநகரில் குளிர் காற்று
சென்னையில் புறநகர் பகுதியான மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று வீசி வருகிறது. விட்டு விட்டு லேசான மழையும் பெய்து வருகிறது.

ஊட்டியை போன்று உள்ளது
அவ்வப்போது தூறல், மிதமான மழை, குளிர்ந்த காற்று, குளிர் என சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் ஊட்டியை போன்று உள்ளது. குளிரால் ஃபேன் கூட போட முடியாத நிலை உள்ளது. பிற்பகலை தாண்டியுள்ள நிலையிலும் சென்னை முழுவதும் அரை இருட்டுடனே உள்ளது.












Click it and Unblock the Notifications