ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கிண்டியில் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக சென்னையில் கிண்டியில் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தால் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் கடந்த 20 நாள்களாக நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. மாணவர்களும், இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.