ஓட்டு போட மட்டுமல்ல, வாகனங்களுக்கும் அடையாள அட்டை தயார்... ஆர்கே நகர் தேர்தலில் புதுமை!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அந்தப் பகுதியினரின் வாகனங்களுக்கு அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இடைத்தேர்தல் நடைபெற உள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் விதமாகவும், வெளி வாகனங்களை கண்காணிக்கும் விதமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி முடிந்துவிட்டதாகவும் விரைவில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : ஆர்.கே நகர் தொகுதியில் வசிப்பவர்களின் இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை கணக்கெடுக்கும் பணி முடிந்துவிட்டது. அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும், அதை அவர்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அடையாள அட்டைகளை கையில் வைத்துக் கொள்ளலாம், 4 சக்கர வாகன ஓட்டிகள் அடையாள அட்டையை காரில் ஒட்டிக் கொள்ளலாம். இதனால் இந்த தொகுதி வாகனங்களையும் வெளி வாகனங்களையும் எளிதில் அடையாளம் காணலாம். வெளியில் இருந்து தொகுதிக்குள் வரும் வாகனங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியுடன் தான் தொகுதிக்குள் வர முடியும்.
3 நாட்கள் மட்டுமே உள்ளது
இது வரை 7 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை வரை வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. 3 வேலை நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கலுக்கு மிச்சம் இருக்கின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
அரசியல் கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆர்கே நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1716 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்கள் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு இதில் எத்தனை பேரை பட்டியலில் சேர்க்கலாம் என்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
வணிகர்களுக்கு சிரமம் இல்லை
256 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறிப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய அரசின் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பணப்பட்டுவாடா செய்பவர்களை மட்டுமே பிடிப்பது நோக்கம். வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுத்துவது நோக்கமல்ல.
தீவிர கண்காணிப்பு
வங்கிக் கணக்கில் யாருக்கேனும் சேர்ந்தார் போல பணம் போடப்பட்டுள்ளதா. திடீரென வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 போடப்பட்டுள்ளதாக என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு ஏதேனும் பரிவர்த்தனை நடக்கிறதா என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வீடுவீடாக வாக்கு சேகரிக்க நிபந்தனை
பிரச்சாரத்திற்கு இரவு 10 மணி வரை அனுமதி இருக்கிறது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பற்கு மட்டுமே சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே நிபந்தனைகள் போடப்பட்டள்ளது என்றும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.