சென்னை 35வது வார்டில் 48 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை- 250 போலீசார் குவிப்பு
சென்னை: சென்னை 35வது வார்டில் உள்ள 48 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவைகளாக அறியப்பட்டதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி 35-வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவுக்காக 12 மையங்களில் 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படடுள்ளன.
அதன்படி, கொடுங்கையூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் 2 வாக்குச் சாவடிகளும் கொடுங்கையூர் காந்தி நகர் 4-வது தெருவில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 6 வாக்குச் சாவடிகளும், கொடுங்கையூர் ஈ.வெ.ரா. தெருவில் உள்ள ஏ.என்.எம். நடுநிலைப்பள்ளியில் 3 வாக்குச் சாவடிகளும், கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள சாய் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 8 வாக்குச் சாவடிகளும், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐ.சி.டி.எஸ். மையத்தில் 1 வாக்குச்சாவடியும், கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவில் உள்ள சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளியில் 7 வாக்குச்சாவடிகளும், எம்.ஆர்.நகர் லட்சுமி அம்மன் நகரில் உள்ள அவர்லேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1 வாக்குச் சாவடியும், எருக்கஞ்சேரி அண்ணாசாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 3 வாக்குச் சாவடியும், எருக்கஞ்சேரி கிருஷ்ண மூர்த்தி வரிசையில் உள்ள சென்னை மதிய உணவு மையத்தில் 7 வாக்குச் சாவடியும், எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனியில் உள்ள புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் 4 வாக்குச் சாவடியும், சின்னான்டி மடம் தண்டையார் பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சென்னை உயரநிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளும், கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 3 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை இப்பகுதியில் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக நேற்று மாலை முதல் நாளை மாலை வரை 35வது வார்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள சர்மாநகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் வருகிற 22-ந் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மதுபானம் விற்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த 35வது வார்டில் பாதுகாப்பு பணியில் 5 உதவி போலீஸ் கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 35 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 250 போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உதவி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது:-
35-வது வார்டில் 48 வாக்குச்சாவடிகளிலும் 48 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தும்பணி நடந்து வருகின்றன. ஓட்டுப்பதிவுக்கான மை உள்ளிட்ட பொருட்கள் மையங்களுக்கு வந்துவிட்டன.
அனைத்து வாக்கு சாவடிகளும் பதட்டமானவை என்பதால் பொதுமக்கள் ஓட்டுப்போடுவதை வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.
மேலும் வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 5 உதவி கமிஷனர் தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 98 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மொபைல் பார்ட்டி, அதிவிரைவுப்படை போன்ற வைகளும் ரோந்து பணியில் ஈடுபடும். தேர்தல் பணியில் 330 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.