செல்போனை சார்ஜ் போட முயலும்போது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பலி
சென்னை: ஓடும் ரயிலில் செல்போனை சார்ஜில் போட முயன்றபோது கால் தவறி கீழே விழுந்த மருத்துவர் பலியானார்.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ரேணுகாதேவி தம்பதியின் ஒரே மகன் எழில்நம்பி(34). அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் படிப்பு படித்து வந்தார்.
அவர் மைசூரில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்க சென்னையில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு கிளம்பினார். அவருடன் அவரது நண்பர்களும் சென்றனர்.

அதிகாலை 2 மணிக்கு ரயில் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கத்தில் செல்கையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட நம்பி ரயிலின் கதவு அருகே சென்றார். அப்போது கால் தடுக்கி அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து சக பயணிகள் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் நம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு நம்பியின் உடல் நேற்று மாலை பல்லாவரத்தில் தகனம் செய்யப்பட்டது. நம்பிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.












Click it and Unblock the Notifications