சென்னையில் நடு ரோட்டில் வெட்டப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனின்றி மரணம்
சென்னை: சென்னையில் நடு ரோட்டில் வைத்து ஒரு கும்பலால் வெட்டப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார்.
துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர் டாக்டர் சுப்பையா. இவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக இருந்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் பணி ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் அபிராமபுரத்தில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டபோது வீட்டுக்கு அருகே வைத்து ஒரு கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார் டாக்டர் சுப்பையா.
அரிவாள்களால் வெட்டப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் டாக்டர் சுப்பையா மரணமடைந்தார்.
நிலத்தகராறில் இந்தக் கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்புதான் டாக்டரின் சொந்த ஊராகும். அங்கு அழருக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற ஆசிரியருக்கும், டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இருப்பினும் டாக்டருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு வந்தது. இருப்பினும் நிலப் பிரச்சினை ஓயவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில்தான் டாக்டர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் சுப்பையாவின் மைத்துனர் மோகன் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பைசில், இவர்களின் உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் டாக்டர் மீது தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ள பைசில் மற்றும் வில்லியமை கைது செய்ய போலீஸார் போனபோது அங்கு வக்கீல்கள், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணனைத் தாக்கினர். மேலும் வக்கீல்களைக் கடத்த முயன்றதாகவும் சங்கரநாராயணன் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியில்தான் தற்போது டாக்டர் உயிரிழந்துள்ளார்.