திருமணத்திற்கு மறுத்ததால் கொன்றேன்... பெசண்ட் நகர் இளம்பெண் படுகொலையில் காதலன் வாக்குமூலம்
சென்னை: திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலியை கொலை செய்ததாக பெசண்ட் நகர் இளம்பெண் கொலை வழக்கில் கைதாகியுள்ள காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம், சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் கழுத்து நெரிக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. சாஸ்திரி நகர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோட்டூர்புரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவரின் மகள் நித்யா என்பது தெரிய வந்தது.
மேலும், விஜயகுமார் காவலாளியாக உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் கேண்டீனில் தான் நித்யா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கே டீ மாஸ்டராக இருந்த புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலையை அவர் காதலித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென இவர்களது காதலில் விரிசல் வந்துள்ளது. ஏழுமலை குறித்து தவறான தகவல்களைக் கேள்விப்பட்ட நித்யா அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
கடந்த வாரம் நித்யா வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார் ஏழுமலை. ஆனால் நித்யாவின் பெற் றோரும் திருமணத்திற்கு மறுத்து விட்டனர். எனவே, அப்போது எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார் ஏழுமலை. அதனைத் தொடர்ந்து நித்யாவிற்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர் அவரது பெற்றோர்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று மாலை பெசண்ட் நகர் கடற்கரையில் நித்யாவைச் சந்தித்த ஏழுமலை அவரைக் கொலை செய்து விட்டு தலைமறைவானார். கொலையாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீல் கிறிஸ்டின், கவுதம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள நண்பர் வீட்டில் ஏழுமலை இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், சாதுர்யமாக அவரை சென்னை வரவழைத்து கைது செய்தனர்.
போலீசில் ஏழுமலை அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு :
நித்யாவை 4 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். அவருக்காக நிறைய செலவழித்துள்ளேன்.
அவரது பெற்றோரிடம் பெண் கேட்டபோது தர மறுத்து விட்டனர். அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மது அருந்திவிட்டு போன் செய்து பெசன்ட்நகர் கடற்கரைக்கு வரவழைத்தேன். ஆனால் அவள், நான் வாங்கி கொடுத்த சிம் கார்டு, சைக்கிள் மற்றும் பரிசு பொருட்களை என்னிடம் கொடுத்து விட்டு, என்னை மறந்து விடு என கறாராக கூறினாள். எவ்வளவோ சமாதானப்படுத்தி திருமணம் செய்யுமாறு கெஞ்சினேன். ஆனால் அவள் கேட்கவில்லை. அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த நான் துப்பட்டாவால் நித்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து சாஸ்திரி நகர் போலீசார் ஏழுமலையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனனர்.