பாஸ்பரஸை தூவி நடுக்குப்பம் மீன் சந்தையை எரித்ததா போலீஸ்?.. மீனவர்கள் திடுக் தகவல்
சென்னை நடுக்குப்பம் மீன்சந்தையை போலீசார்தான் எரித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொடி போன்ற ஒன்றை (பாஸ்பரஸ்) தூவிதான் மீன்சந்தையை எரித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சி
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக இருந்த சென்னை மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீஸ் கும்பல் நடுக்குப்பம் மீன்சந்தையை பாஸ்பரஸை தூவி எரித்ததாக அப்பகுதி மக்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு புரட்சியின் வெற்றியை கொண்டாட வேண்டிய தமிழகத்தை ஆறாத வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது போலீஸ் கும்பல். போலீஸ் சீருடை அணிந்த காட்டுமிராண்டி கும்பல் மாணவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அப்பாவி சென்னை மீனவ மக்கள் மீது கோழைத்தனமான கொலைவெறித் தாக்குதலை தொடர்ந்து கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

மீன் சந்தை தீ வைப்பு
மெரினா கடலோர மீனவ மக்களை நரவேட்டையாடியிருக்கிறது போலீஸ் கும்பல். இதில் உச்சமாக நடுக்குப்பம் பகுதியில் 200 கடைகளை கொண்ட மீன் சந்தையேயே அப்படியே தீ வைத்து எரித்திருக்கிறது.

தப்பி ஓடினோம்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடுக்குப்பம் மீனவ மக்கள், போலீசார் திடீரென இந்த மீன்சந்தைக்குள் நுழைந்தனர். நாங்கள் மீன்களை அப்படியேவிட்டுவிட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடினோம்.

பொடி போல வீசி...
அப்போது ஏதோ மருந்து, பொடி போல இருந்ததை இந்த மீன்சந்தை மீது போலீஸ் தூவியது. அந்த பொடி தூவிய சிறிதுநேரத்திலேயே மீன்சந்தை அப்படியே எரிந்து போனது... மீன்களும் கருகிப் போனதால் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறோம் என்றனர்.

பாஸ்பரஸ்?
பொதுமக்கள் சுட்டிக்காட்டும் மருந்து, பொடி என்பது பாஸ்பரஸாக இருக்கலாம்; குடிசைகள், ஆட்டோக்களுக்கு தீ வைத்த போலீஸ் கும்பல் உச்சகட்டமாக பாஸ்பரஸை தூவி மீன் சந்தையை எரித்திருக்கலாம் என்பது கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications