மழை நின்றும் வடியாத வெள்ளம்... பசியோடு தவிக்கும் மக்கள்... உணவு வழங்கும் ராணுவ வீரர்கள்
சென்னை: சென்னையில் மழை நின்று லேசாக வெயில் தலைகாட்டத் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில், வீடுகளை விட்டு வெளியேறாமல் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருபவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் உணவு, உடை மற்றும் தற்காலிக குடியிருப்புகளை வழங்குவதற்காக, பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மினி லாரிகள், வேன், கார்களில் நிவாரண பொருட்களை கொண்டு வந்தனர். ராணுவ வீரர்களும் கொட்டும் மழையில் உணவுகளை கொண்டுவந்து கொடுத்து வருகின்றனர்.
நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு உணவுப்பொருட்களான பிஸ்கட், ரொட்டி, பழம், துணிமணிகள் ஆகியவற்றை கொண்டு வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் நேரடியாக வினியோகம் செய்தனர்.

தவிக்கும் மக்கள்
சென்னையில் கனமழை நின்றபோதும், வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இடுப்பளவுக்கு மேல் தேங்கி நிற்கும் தண்ணீரால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், வீட்டின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் வடியாததால் மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக அடுக்குமாடிகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சொந்த ஊருக்கு பயணம்
வெள்ளத்தால் தங்கியிருக்கும் வீடுகளில் தங்க முடியாமல் தவிப்பவர்கள், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள நகரங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதன் மூலம் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மழையிலும் நிவாரணம்
ஞாயிறன்று காலை அண்ணாசாலை, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம், வியாசர்பாடி, மணலி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் உணவு பொருட்கள் கெட்டுவிடும் என்பதால் அடாது மழையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வீடுகள் தோறும் சென்று வினியோகம் செய்தனர்.

கோட்டூர்புரத்தில் அச்சம்
கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. சற்றே வெள்ளம் வடிந்த நிலையில் மீண்டும் நேற்று காலையில் பெய்த மழையால் அடையாறு ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அப்பகுதியில் வசிப்பவர்கள், வெள்ளம் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, கோட்டூர்புரம் சாலையில் குவிந்தனர்.

ராணுவ வீரர்கள் நிவாரணம்
தாம்பரம், பள்ளிக்கரணை, கோட்டூர்புரம், பல்லாவரம், வேளச்சேரி, சிட்கோ நகர், பெருங்குடி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வீடுகளை இழந்த 20 ஆயிரம் பொதுமக்களுக்கு இந்திய ராணுவத்தினர் சென்று உணவு பொட்டலங்களையும், துணிமணிகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர். தொடர்ந்து 7 ஆயிரம் பேரை படகுகள் மூலமாகவும், 9 ஆயிரம் பேர் வாகனங்கள் மூலமாகவும் ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், ராணுவ மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிகிச்சையும் அளித்தனர்.

வடசென்னையில் நிவாரணம்
சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் வாகனங்களில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் மனமுவந்து உதவிகளை செய்து வருகின்றனர். வடசென்னை பகுதிக்கு உள்பட்ட புளியந்தோப்பு, கவியரசு கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், மணலி, திருவெற்றியூர், விம்கோ நகர், தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்
வெள்ளத்தால் குடிசைகளை இழந்தவர்கள் சாலையோரத்தில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தான் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், அமைச்சர்களோ, அதிகாரிகளோ தங்களை எட்டிகூட பார்க்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முகம்தெரியதவர்களுக்கு நன்றி
நாங்கள் ஓட்டு போட்டு தேர்தெடுத்தவர்கள் யாரும் எங்களை வந்து எட்டி பார்க்கவில்லை. ஆனால் யார், எவர் என்று தெரியாதவர்கள் எல்லாம் எங்களை வந்து விசாரித்து, உணவு, குடிநீர் கொடுக்கிறார்கள் மருந்து மாத்திரை கொடுக்கிறார்கள் மனித நேயம் கொண்ட மக்களுக்கு நன்றி என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications