சென்னையின் காலைப்பொழுதை மந்தமாக்கிய வெண்பனி... விமான, வாகன போக்குவரத்தில் சிரமம்!
சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: சென்னையில் காலைப்பொழுதை பனிமூட்டம் மந்தமாக்கியதால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. மேலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னையில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 8.30 மணி அளவிலும் கூட பனிமூடம் விலகாமல் வெண்பனி போர்த்தி அதிகாலை போன்ற சூழலையே ஏற்படுத்தியதால் பலருக்கு காலை தூக்கம் கலையவே தாமதமாகிவிட்டது.
பனிமூட்டம் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு ஆளானார்கள். சாலைகளில் செல்லும் வாகனங்கள் எதிரே யார் வருகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு போர்த்தியிருந்த பனியால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி பயணித்தனர்.
புறநகரிலும் பனிமூட்டம்
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் பனிமூட்டம் கடுமையாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
7 விமானங்கள் தாமதம்
இதே போன்று சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடுமையான பனிமூட்டத்தால் வானில் விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதால் சுமார் 7 விமானங்கள் தாமதமாக சென்னை விமான நிலையம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 விமானங்கள் பெங்களூரில் தலையிரங்கின
மோசமான வானிலையால் விமானத்தை சென்னையில் தரையிறக்க முடியாமல் இரண்டு விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மொரிசீயஸ், ரியாத்தில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் பனிமூட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
மக்கள் கூட்டம் குறைவு
மேலும் மின்சார ரயில் நிலையங்களில் வழக்கமாக காலை 8 மணியளவில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், சென்னையின் காலைப் பொழுது இன்று பனிமூட்டம் காரணமாக மந்தமாகவே இருந்தது. ரயில்நிலையங்கள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. மேலும் மின்சார ரயில்களும் வழக்கமான வேகத்தில் இருந்து சற்று வேகம் குறைவாகவே இயக்கப்பட்டன.