சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி: 2015-2016ல் மாணவர் சேர்க்கை
சென்னை: சென்னையில் மேலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2015-2016ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் 1 இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி உள்ளது.
மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. இதனாலும் சுகாராத வசதியை பொருத்த வரை தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கவும் முதல்வர் ஜெயலலிதா பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
வெளிமாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் தமிழகத்திற்கு சிகிச்சை பெற வருவதால் மாநிலத்தில் மருத்துவ சுற்றுலா அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை துவங்கி வருகிறது.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு ஒரே ஆண்டில் இந்திய மருத்துவ கவுனிசிலின் அனுமதியோடு மாணவர்கள் சேர்க்கை நடத்தியது தமிழக அரசு. சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஏ.பிளாக்கில் ரூ.143.14 கோடி செலவில் மருத்துவமனையும், பி பிளாக்கில் ரூ.200 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வாலாஜா சாலையில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்த உடன்
இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி பெற்று 2015-2106ம் ஆண்டில் முதல்கட்டமாக 100 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என ஏற்கனவே 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications