குடோன் சுற்றுச் சுவர் விபத்தில் 11 பேர் பலி – கட்டட உரிமையாளர் தலைமறைவு
செங்குன்றம்: சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மழையின் காரணமாக கிட்டங்கி ஒன்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த கட்டடத்தின் உரிமையாளர் மனைவியுடன் தலைமறைவாகியுள்ளார்.
சென்னை செங்குன்றம், எடப்பாளையத்தில் பாலன் என்பவருக்கு சொந்தமான 2 கிட்டங்கிகள் உள்ளன. இந்த கிட்டங்கிகளைச் சுற்றி உயரமான சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலனின் அண்ணன் மோகனுக்கு சொந்தமான மூன்றாவது கிட்டங்கியில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வந்தது.
இதில் ஈடுபட்டிருந்த 30 தொழிலாளர்கள், பாலனின் கிட்டங்கிச் சுற்றுச் சுவர் அருகில் குடிசை வேய்ந்து தற்காலிகமாக தங்கி இருந்தனர். சனிக்கிழமை அன்று அதில் 12 பேர் மட்டும் குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பெய்த மழையால் அச்சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 பேர் உயிர் இழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்து தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் பாலன், கட்டிட மேஸ்திரி தேவேந்திரன், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 கிட்டங்கிகளும் அமைந்துள்ள பகுதியில் 16 ஏக்கர் நிலம் உள்ளது. இதை சுற்றி 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 7 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டவே அனுமதி பெறப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 16 ஏக்கர் நிலத்தில் 12 ஏக்கர் மட்டும்தான் பட்டா நிலம் என்பதும், 4 ஏக்கர் நிலம் புறம்போக்கு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்த சுற்றுச்சுவரில் 200 அடி சுவர் மழையால் இடிந்து விழுந்துவிட்டது. முறையாக அனுமதி பெறாத இக்கிட்டங்கிகளை இடிக்க ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பாலனின் அண்ணன் மோகன் தன்னுடைய மனைவியுடன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications