அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வெற்றிவேல் மனு டிஸ்மிஸ்.. ரூ. 1லட்சம் அபராதம் விதித்தது கோர்ட்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், வெற்றிவேல் எம்எல்ஏவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையேதும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தடை விதிக்கக் கோரி வெற்றிவேல் தொடர்ந்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை வரும் 12ஆம் தேதி காலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடத்த தமிழக முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,780 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 250 பேருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடக்க 2 நாட்களே உள்ள நிலையில், இதற்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம் வெள்ளிக்கிழமை மாலை ஒரு முறையீடு செய்தார்.
அதில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், அவர் பொதுக்குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை நடத்த உள்ளதாக சிலர் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் செயலாளரின் அனுமதியின்றி இக்கூட்டத்தைக் கூட்ட அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
எனவே, பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதுசம்பந்தமாக டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். எனவே, அவசரம் கருதி எங்கள் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டால், வரும் 11ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடையில்லை என்று கூறி வெற்றிவேல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிமன்ற நேரத்தை வீணடித்த வெற்றிவேல் எம்எல்ஏவிற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு முதன்முறையாக பொதுக்குழு கூட உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.