இலவச இணையதள இணைப்பு விவகாரம்... தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: அரசு அலுவலகங்களுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து இலவச இணையதள இணைப்புகளை பெறுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு கடந்த மே மாதம் 4-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் சாலைகளில் பள்ளம் தோண்டி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் ஒயர்களை பதித்துக் கொள்ளலாம். அதற்காக தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக அந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் செயல்படும் இணையதள இணைப்புகளை வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அரசு அலுவலகங்களுக்கு இந்த இணையதள இணைப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தமிழக அரசிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவின் மீது தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுத்து, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications