சிவாஜி சிலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்றுங்கள்: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி திமுக ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரை முன்பு இருக்கும் காமராஜர் சாலை- டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை வைக்கப்பட்டது. சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே அதை உடனே அகற்ற வேண்டும் எனவும் கூறி நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்த விசாரணை கடந்த வாரம் நடந்தபோது சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. வாகனங்களில் செல்பவர்களுக்கு எதிர் திசையில் இருந்து வரும் வாகனம் தெரியாததால் பல விபத்துக்குள் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று கூறி நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
சிலைகள் எல்லாம் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அது போல சிவாஜி கணேசன் சிலையும் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை. சிவாஜி கணேசன் சிலையை அகற்றினால் பொதுமக்களின் மனதை புண்படுத்தும். எனவே சிலையை அகற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் சசிதரன் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது. மனுக்களை விசாரித்த அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிவாஜி சிலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்றலாம் என்று உத்தரவிட்டனர்.