திருப்பத்தூர் பெரியார் சிலை சேதம்.. 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் 3 மாதத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜக பிரமுகர்கள் முத்துராமன் மற்றும் சிலம்பரசன் ஆகிய 2 பேர் சேதப்படுத்தினர். அவர்கள் மீது திருப்பத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை எதிர்த்து திராவிட கழக பிரமுகர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பாஜக தேசிய செயலாளர் எச். இராஜா அவருடைய டிவிட்டர் பதிவில் லெனின் சிலையை உடைத்தது போல, பெரியார் சிலையையும் உடைக்க வேண்டும் என்று பதிவிட்டதன் தொடர்ச்சியாக இது போன்று பெரியார் சிலைகள் உடைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே திருப்பத்தூரில் நடைபெற்ற சம்பவமும் இதன் தொடர்ச்சியாக நடைபெற்றது என்றும், எனவே இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இராஜ மாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி இந்த வழக்கு குறித்து 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திருப்பத்தூர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications