அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு- எந்த காயாக இருந்தாலும் கிலோ ரூ60- 'தகிக்கும்' சென்னை!
சென்னை: கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதில் சென்னையின் நிலைதான் மிகவும் பரிதாபம். பொத்துக் கொண்டு ஊற்றிய மழையால் சென்னைவாசிகளின் வீடுகளுக்குள் தண்ணீர் வெள்ளமெனப் புகுந்து அவர்களை ஒரு வழி செய்தது.
இந்நிலையில் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்னும் கதையாக நேற்று முதல் மழை நின்றபோதிலும் மக்களின் பிரச்சினைகள் துளிக் கூட குறையாமல் இருக்கிறது.

மழை மழை
சென்னைவாசிகள் மழை பெய்தபோது அடைந்த துன்பத்தை விட மழை விட்டபின்னர் தான் நிறைய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நேற்று முதல் மழை படிப்படியாக குறைந்து ஒருவழியாக நின்று விட்டது. ஆனால் இது என்ன துன்பம் இதை விடவும் அதிகமான துன்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதைப் போல முதலாவதாக சென்னை முழுவதும் கரண்ட் கட்டாகி சென்னை நகரமே இருளில் மூழ்கியது.

உணவுப் பொருட்கள்
மழை முடிந்து விட்டதே சற்று கிச்சன் பக்கம் எட்டிப் பார்க்கலாம் என்று எண்ணிய இல்லத்தரசிகள் சற்று நேரத்திலேயே தங்களின் முடிவை அதிரடியாக மாற்றிக் கொண்டனர். காரணம் அந்த அளவிற்கு அடிப்படை உணவுப் பொருட்களின் விலையானது 2 மடங்காக உயர்ந்துள்ளது.

பால் மற்றும் பிரட்
மளிகைக் கடை தொடங்கி பெரிய சூப்பர் மார்க்கெட்கள் வரை பால், பிரட் மற்றும் முட்டை எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில கடைகளிலும் விரைவாகவே விற்றுத் தீர்ந்ததால் கடைகளைத் திறந்து வைக்காமல் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து மூடி வருகின்றனர். மீண்டும் பொருட்கள் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் கடைகளைத் திறந்து வைத்து என்ன செய்வது என்பதே பெரும்பாலான கடைக்காரர்களின் பதிலாக உள்ளது.

1 மணி நேரத்தில்
பெரும்பாலும் முட்டைக்கடைகளும் இல்லாத நிலையில் திறந்து வைத்த கடைக்காரர்கள் 1 மணி நேரத்தில் கடைகளை மூடி விட்டனர். காரணம் 2 நாட்களுக்கு விற்கக் கூடிய முட்டையானது 1 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது தானாம்.

ராக்கெட் வேகத்தில்
காய்கறிக்கடைகளில் நீண்ட கூட்டதைப் பார்த்து கடைக்குச் சென்ற மக்கள் அருகில் இருந்த உணவகங்களில் உணவை வாங்கிக் கொண்டு சென்றனர். இவற்றையும் மீறி காத்திருந்து காய்கறி வாங்கிய மக்களின் நிலையானது பரிதாபமாக இருந்தது. ஏனெனில் காய்கறிகளின் விலையானது அந்த அளவிற்கு உயர்ந்து இருந்தது.

தக்காளி, வெங்காயம்
தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் அடிப்படை விலையே 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் இந்த விலை ஏற்றத்தைத் தவிர்க்க முடியாது என்று காய்கறி வியாபாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் சென்னை வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த மக்கள், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications