மாஞ்சா நூல் தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்.. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை : மாஞ்சா நூல் தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் கோபிகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் பறக்க விடுவதற்கு தடை உள்ளது. இருந்தபோதிலும் மாஞ்சா நூலில் பட்டங்களை பறக்கவிடுவதும், அதனால் சிறிய குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழப்பதும் தொடர்கிறது.

அதனால், மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டங்களை பறக்க விடுவதற்கும், மாஞ்சா நூல் தயாரித்து விற்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும். சென்னையில் பட்டங்களை பறக்கவிட வார்டுக்கு ஒரு பாதுகாப்பான பிரத்யேக இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டங்களை பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு வழிவகை உள்ளது.
மனுதாரர் கோருவது போல சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கென பிரத்யேக இடத்தை ஒதுக்குவது சாத்தியமில்லை. சென்னை காற்றாடி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், தமிழ்நாடு பட்டம் பறக்கவிடுவோர் சங்கம் ஆகியவை மாஞ்சா நூல் உற்பத்தி செய்யமாட்டோம் என்றும், அந்த நூலைப் பயன்படுத்தி பட்டம் பறக்கவிடமாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், "இவ்வழக்கில் அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாஞ்சா நூல் விற்கும்போது அதைப் பறிமுதல் செய்வதைவிட, மாஞ்சா நூல் தயாரிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications