'லிங்கா'வுக்காக 'கபாலி'யை தடை செய்ய முடியாது.. ஹைகோர்ட் உத்தரவு... ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: உரிய இழப்பீடு வழங்காமல் கபாலியை ரிலீஸ் செய்யக் கூடாது என சுக்ரா பிலிம்ஸ் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்தை வெளியிட தடையில்லை என அறிவித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் நாளை ரிலீசாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், லிங்கா பட விவகாரம் தொடர்பாக கபாலியை ரிலீஸ் செய்ய தடைகோரி நேற்று புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் நாளை கபாலி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.

ரஜினி நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் வெளியான லிங்கா படம் நஷ்டம் அடைந்ததாக விநியோகஸ்தர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக சுக்ரா பிலிம்ஸ் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
அதில், லிங்கா பிரச்னை தொடர்பாக உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், எனவே இழப்பீடு வழங்காமல் கபாலி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் சுக்ரா பிலிம்ஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக நாளைக்குள் ( இன்றுக்குள்) விளக்கம் அளிக்க சொல்லி நடிகர் ரஜினிகாந்த், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கபாலி படத்தை வெளியிட தடையில்லை எனத் தெரிவித்தார்.
இதனால் கபாலி ரிலீசில் இருந்த பிரச்சினை தீர்ந்துள்ளது. நாளை திட்டமிட்டபடி கபாலி ரிலீசாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications