சென்னை கல்லூரி வெடிகுண்டு மிரட்டலில் திடீர் திருப்பம்: அதே கல்லூரி மாணவி கைது
சென்னை: சென்னை ஜெயின் கல்லூரி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார், 14க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டது. ஆனபோதும், தொடர்ந்து போலீசாருக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை குண்டுவெடிப்பிற்கு அடுத்த நாளான மே 2ம் தேதி தியாகராயநகர் முத்துரங்கன் தெருவில் உள்ள, சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் குண்டு வெடிக்கப்போவதாக பெண் ஒருவர், அதே கல்லூரிக்கு போனில் பேசினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய தீவிர சோதனையில், ஜெயின் கல்லூரியில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. கல்லூரி உட்பட இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெயின் கல்லூரிக்கு பெண் குரலில் பேசியதாக ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப் பட்டனர். இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் திரிபாதி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலில் புதிய திருப்பமாக ஜெயின் கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட மாணவி எதற்காக தனது கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப் பட்ட எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.