சென்னையில் ஜனவரியில் ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக்- கொண்டாட தயாராகுங்கள் காளையர்களே!
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 7ஆம் தேதியன்று கிழக்குக்கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மக்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்றன. மதுரையில் அலங்காநல்லூர்,பாலமேடு, அவனியாபுரம் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றன. இதனைக்காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை சோர்வடையச் செய்தது.
தமிழகம் முழுவதும் போராட்டம்
இந்தாண்டு ஜனவரி மாதம் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மக்களின் இடைவிடாத போராட்டத்தால் தமிழக சட்டசபையில் இதுதொடர்பாகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்கள் வீடு வாசலை விட்டு போராடியதால் வாடிவாசல் திறக்கப்பட்டது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது.
சீறிப்பாய்ந்த காளைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர்,பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை வீரர்கள் அடக்கினர். வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து வந்ததைப் பார்த்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உற்சாகமடைந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம், கர்நாடகா அரசுகள் இயற்றிய சட்டங்களை எதிர்த்து,விலங்குகள் ஆர்வல அமைப்பான, 'பீட்டா' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்தன. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா மனுவில் கோரிக்கை விடுத்தது.
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பொங்கலுக்கு வாடி வாசல் வழியே காளைகள் துள்ளி வருவது உறுதியானது. இதனிடையே சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற புரட்சியை அடுத்து ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டி நடைபெற உள்ளது.
கிழக்குக்கடற்கரை சாலை
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெறும் என்றும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.