சென்னையில் மட்டன் பிரியாணி சாப்பிட்டு, மாம்பழங்கள் வாங்கிய ப்ராவோ!
சென்னை: என் சொந்த ஊரான ட்ரினிடாட் டொபாக்கோ போலவே சென்னையும் இருக்கிறது. இங்கு ஒரு நடனப்பள்ளி தொடங்கும் யோசனை உள்ளது, என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ட்வைன் பிராவோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ட்வைன் பிராவோ மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர்.
நடிப்பிலும் ஆர்வம் கொண்ட பிராவோ, சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'உலா' என்ற தமிழ்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சலோ சலோ
சென்னையில் நேற்று பிராவோ இசையமைத்து வெளியிட்ட 'சலோ சலோ' ஆல்பம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கரீபியன் இசையை வெஸ்டர்ன் மியூசிக்கோடு கலந்து, இந்திய இசையையும் இணைத்து இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு விழாவில் சென்னை அணியின் கேப்டன் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றனர்.

உலகக் கோப்பை
இந்திய பாணியில் மஞ்சள் நிற ஷெர்வானி அணிந்து விழாவில் கலந்து கொண்ட பிராவோ பேசுகையில், ''உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் கிடைக்காதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

உலா
ஆனால் அந்த 2 மாத காலத்தையும் எனது இசைப்பயணத்திற்கு பயன்படுத்தி கொண்டேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை 'உலா' என்ற படத்தில் நடித்துள்ளேன். அதற்கு பின் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.எனது நடிப்பும் நடனமும் தமிழ் மக்களுக்கு பிடிக்கும் என்று கருதுகிறேன்.

நடனப் பள்ளி
சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். டிரினிடாட் டொபாக்கோ போலவே இங்குள்ள மக்களும் இசையை மிகவும் நேசிக்கிறார்கள். விரைவில் சென்னையில் ஒரு நடனப்பள்ளியை தொடங்கவுள்ளேன்.

ரஜினியைப் பிடிக்கும்
இந்திய இசையை நான் மிகவும் விரும்புகிறேன். ரிங்க...ரிங்கா.. மற்றும் லுங்கி டான்ஸ் பாடல் எனக்கு பிடித்ததாகும். சூப்பர் ஸ்டார் ரஜினியை மிகவும் பிடிக்கும்

மட்டன் பிரியாணி
சென்னையில் எனக்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணியாகும். இங்குள்ள தெருக்களில் நடந்து சென்று மாம்பழங்களை வாங்கி சென்று இருக்கிறேன்,'' என்றார்.












Click it and Unblock the Notifications