மண்டையைப் பிளக்கும் வெயில்... முக்காடு அணிந்து வாகனம் ஓட்டும் பெண்கள்!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டும் பெண்கள் முகத்திற்கு முக்காடிட்டவாறு பயணம் செய்கின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமான கத்திரி கடந்த 4ம் தேதி தொடங்கியது. ஆனால், கத்தரி தொடங்கிய சில தினங்களிலேயே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி போன்ற காரணங்களால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
மழை காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சியினால், இந்தாண்டு கோடையை ஒரு வழியாக சமாளித்து விட்டோம் என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

அதிகரிக்கும் வெப்பம்...
கத்தரி முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

108 டிகிரி பாரன்ஹீட்...
சென்னை மற்றும் வேலூரில் நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. அதேபோல் பரங்கிப்பேட்டை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனல்காற்று...
பகல் நேரங்களில் அனல்காற்று தீவிரமாக வீசுவதால், பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற பயந்து, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்

தலைக்கு முக்காடு...
நடந்து செல்பவர்கள் கையில் குடையுடன் அல்லது தலையில் தொப்பி அணிந்து வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் முகத்திற்கும், தலைக்கும் முக்காடிட்டு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications