தாலியைப் பறித்த திருடர்களிடம் தீரத்துடன் போராடிய பெண்... சங்கிலி பறிபோனது!
பெரம்பூர்: சென்னையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெண்மணி ஒருவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் சங்கிலி தொடர் போல் தினமும் நடந்து கொண்டே இருக்கிறது.
கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 3 ஆவது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வமணி . இவரது மனைவி எம்ரோஸ் . நேற்று இரவு 9 மணியளவில் தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் எம்ரோஸ் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்தனர். சங்கிலியை கையில் பிடித்த எம்ரோஸ் "திருடன் திருடன்" என்று கத்திக் கொண்டே தாலியை காப்பாற்ற போராடினார்.
ஆனால் சுதாரித்த கொள்ளையர்கள் தாலி சங்கிலியை வேகமாக பிடித்து இழுத்து அறுத்தனர். இதில் எம்ரோஸ் தடுமாறி கீழே விழுந்தார். கொள்ளையர்கள் 5 பவுன் சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
காயமடைந்த ரோஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பில் மூழ்கியுள்ளது.