சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ் : மாணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சென்னை: சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் மாணவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை, மெட்ரோ ரயில் பணிக்காக இடமாற்றம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, அக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்டப் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை ரிசர்வ் வங்கி அருவே போலீசார் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று குறளகம் அருகிலும் மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கலைத்தனர். இதில் மாணவ, மாணவியர் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் தாக்குதலில் போலீசார் ஐந்து பேரும் காயமடைந்தனர். இதையடுத்து, தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் மாணவர்கள் சட்டக்கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் களின் போராட்டம் தீவிரம் அடைவதை அறிந்த அரசு சட்டக்கல்லூரிக்கு 7 நாள் விடுமுறை அறிவித்தது. ஆனால், இதை ஏற்காத மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்றப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். எனினும் மாலையே போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மாலை 5.30 மணியளவில், முதலாம் ஆண்டு மாணவர் பிரபாகரன் என்பவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக கூறி, கல்லூரி கட்டிடத்தின் 2வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், உடனடியாக மாடிக்கு ஓடி சென்று, அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications