அந்தமான் கடலில் புதிய மேலடுக்குசுழற்சி.. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு மேகமூட்டம்!
அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம். கடந்தாண்டு இந்த காலத்தில் கொட்டித் தீர்த்த மழையால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தாண்டு வடகிழக்குப்பருவமழை காலம் தொடங்கி இரண்டு மாத காலம் ஆனபோதும், இன்னும் சரிவர மழை பெய்யவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, பின்னர் அது புயலாக மாறியது. 'நாடா' என்று பெயரிடப்பட்ட அந்த புயல், தமிழகத்திற்கு பெருமழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடா வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதனால் சில மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், மேற்கு நோக்கி நகர்ந்து சென்ற அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "உள்தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.
இது ஒருபுறம் இருக்க, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. அதோடு, இது வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு வர்தா எனப் பெயரிடப்படும்.
இந்த மேலடுக்கு சுழற்றி தற்போது தமிழகத்தில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் பட்சத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு பின்வருமாறு:-
விருதுநகர், கல்பாக்கம் தலா 8 செ.மீ., சென்னை விமானநிலையம், மதுரை விமானநிலையம், சிவகாசி, திருத்தணி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருமங்கலம் தலா 7 செ.மீ., செம்பரம்பாக்கம், பூந்தமல்லி தலா 6 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், வேலூர், பரமக்குடி தலா 5 செ.மீ., அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் தலா 4 செ.மீ., பூண்டி, அருப்புக்கோட்டை தலா 3 செ.மீ., மேலூர், ஊட்டி, திண்டிவனம் தலா 2 செ.மீ. மழை பெய்து உள்ளது. தமிழகத்தில் மேலும் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்து உள்ளது.