பணம் இல்லாத ஏடிஎம் எந்திரம்.. ஆத்திரத்தில் உடைத்த சென்னை நபர்
ஏடிஎம் எந்திரத்தில் பணம் இல்லாத கோபத்தில் அந்த எந்திரத்தை உடைத்த சென்னை நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: பணம் எடுக்க வந்த இடத்தில் ஏடிஎம் எந்திரத்தில் பணம் இல்லாததால் ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்த நபர் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து விட்டுச் சென்றுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பணப் பற்றாக்குறை தீரவில்லை. இன்னும் ஏடிஎம் எந்திரங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணம் போடப்படுவதில்லை. அதே போல பல மையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் அதிகம் வருகின்றன. இதனால் மக்கள் எரிச்சலில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு ஒருவர் வந்துள்ளார்.
பணம் எடுக்க வந்த அவர் பணம் இல்லாமல் இருந்ததால் கோபமடைந்து முன்பக்க எந்திரத்தை உடைத்து விட்டு போய் விட்டார். இன்று காலைதான் எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. முதலில் கொள்ளையடிக்க நடந்த முயற்சியா என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இரவு முதலே அதில் பணம் இல்லை என்பதால் பணம் எடுக்க வந்தவர் தான் ஏமாற்றத்தில் உடைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது.அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மையத்தில் உள்ள சிசிடிவி பதிவை வைத்து சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications