“எனக்கு அவளும், அவளுக்கு நானுமே ஊன்றுகோல்” – நெகிழவைத்த 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணம்!
சென்னை: சென்னையில் இன்று மாற்றுத் திறனாளிகளான 58 ஜோடிகளுக்கு விமரிசையாக ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
சென்னை கீதா பவன் அறக்கட்டளையும், ஊனமுற்றோர் கூட்டமைப்பும் சேர்ந்து மாற்று திறனாளிகள் திருமணத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டும் 58 ஜோடிகளை சுயம்வரம் மூலம் தேர்வு செய்தது. அவர்களுக்கான திருமணம் கீதா பவனில் இன்று நடந்தது.

ஜோடி சூப்பர் ஜோடி:
எல்லா மணமக்களும் மண்டபத்தில் ஜோடி, ஜோடியாக அமர வைக்கப்பட்டனர்.

மாங்கல்யம் தந்துனானே:
பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப்புடவையுடன் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்த ஜோடிகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது.

கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர்:
திருச்சியைச் சேர்ந்த சக்திவேல், சங்கீதா தம்பதிகள் இருவரும் பார்வையிழந்தவர்கள். மணமாலை சூடியதும் மனக்கண்ணில் தன் துணையை நினைத்து கொண்டே ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அவளுக்கு நானும், எனக்கு அவளும்:
கால்களை போலியோவுக்கு பறிகொடுத்த சங்கரும், எஸ்தரும் ஊன்றுகோல் உதவியுடன் மணமேடைக்கு வந்து மாலை சூடினார்கள். இனி எனக்கு அவளும், அவளுக்கு நானும் ஊன்றுகோலாய் இருப்போம் என்றார்கள் மகிழ்ச்சியுடன்.

குணத்தால் ஈர்க்கப்பட்டவர்:
கால்களை இழந்தும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தி.நகர் அரிபாபுவுக்கும் தங்கசாலையில் அரசு அச்சகத்தில் பணியாற்றும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர். எனக்கு ஊனம் பெரிதல்ல அவரது குணம்தான் என்னை கவர்ந்தது என்று நெகிழ்ந்தார் ராதிகா.

மாமாவுக்கு நானே என்றும் துணை:
சோழவரம் சுதாகர் கால்களை இழந்தாலும் மனம் தளராமல் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்காள் மகள் சந்திரலேகா. எந்த குறையும் இல்லாதவர். மாமாவுக்கு துணையாக என்றும் இருப்பேன் என்று சுதாகருக்கு கழுத்தை நீட்டினார்.

மனதார மாங்கல்யம்:
நாகர்கோவிலைச் சேர்ந்த கணபதிக்கு கையில் ஊனம். திருவண்ணாமலை பாஞ்சாலிக்கு கால் ஊனம். இருவரும் சுயம்வரத்தில் ஒருவரையொருவர் மனதாக ஏற்றுக் கொண்டனர்.

நெகிழ வைத்த திருமணம்:
மாற்று திறனாளிகள் இல்லாத 7 ஆண்களும், 21 பெண்களும் மாற்று திறனாளிகளை தங்கள் துணையாக ஏற்றுக் கொண்டது அனைவரையும் நெகிழ வைத்தது.












Click it and Unblock the Notifications