தலையில் கம்பி பாய்ந்து அப்பாவி இறந்த பிறகும் 'சென்னை மெட்ரோ' அலட்சியம்!
சென்னை: மெட்ரோ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, காவல்துறை விசாரணை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை, ஆலந்தூர்-மீனம்பாக்கம் நடுவே ஜி.எஸ்.டி சாலையில், மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இன்று காலை 9 மணியளவில் அலுவலகம் செல்வதற்காக, அந்த வழியாக பைக்கில் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார் மடிப்பாக்கத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கிரிதர் (32).

இந்நிலையில், மெட்ரோ ரயில் பாதை பாலத்தில் இருந்து, சுமார் 40 முதல் 50 கிலோ எடையுள்ள இரும்பு கம்பி கீழே விழுந்துள்ளது. அது கிரிதர் ஹெல்மெட்டை உடைத்து தலைக்குள் பாய்ந்துள்ளது. இதனால், கிரிதர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கிரிதரை அனுப்பியுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே கிரிதர் பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் அலுவலகம் நோக்கி சென்ற ஒரு அப்பாவி, மெட்ரோ ரயில் பணியாளர்கள் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார்.
கிரிதர் ஐடி கார்டை வைத்து, அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். குரோம்பேட்டை மருத்துவமனையில் குவிந்துள்ள குடும்பத்தார் கதறி அழுதனர். இந்த விபத்தை தொடர்ந்து ஜி.எஸ்.டி சாலையில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை இணை ஆணையர் அருண் சம்பவ இடத்தில் பரிசீலனை செய்தார். பணியில் இருந்த மெட்ரோ ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் சிலர் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களாகும்.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் கேட்டபோது, பரங்கிமலை காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்கள் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்தபிறகு அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், விபத்து நடந்த தடயமே இல்லாமல் அனைத்து உபகரணங்களையும் அகற்றிவிட்டு அங்கு தொடர்ந்து பணிகள் நடக்கின்றன. கூடுதலாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications