டெண்டர் கேட்டாச்சு.. சென்னை மெட்ரோ ரயில் பாதை விரிவாக்க பணி விரைவில் தொடக்கம்
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில், இரவு முழுக்க மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே வண்ணார்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
சென்னையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. வழக்கமாக கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய இரு மார்க்கங்களிலும், காலை 6 மணிக்கு ரயில்கள் இயக்கம் துவங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும்.
விடுமுறை, முக்கியமான பண்டிகை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். மழையால் சென்னை பாதிக்கப்பட்டிருந்தபோதும், மெட்ரோ ரயில் கூடுதல் நேரத்திற்கு இயக்கப்பட்டது.

நள்ளிரவு
இந்நிலையில் இம்மாதம் 31ம் தேதி இரவு 12 மணிக்கு பிறக்கும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்க நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இரவில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரின் போக்குவரத்து வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பகுதிகள்
இதனிடையே, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயிலின் எக்ஸ்டென்சன் பணிகளை துவங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ளச் சேதத்திற்கு பிறகு சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இப்பணி விரைவில் தொடங்க உள்ளதாம். டெண்டர் கோரப்பட்டுள்ளது.

5 வருடம் ஆனது
கோயம்பேடு-ஆலந்தூர் நடுவேயான மெட்ரோ ரயில் பாதைக்கு 2010ல் அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டில்தான் அப்பணி பயன்பாட்டுக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த ரயில் திட்டத்தை கொண்டுவந்ததாக அனைத்து முக்கிய கட்சிகளும் போட்டி போட்டு அறிவித்ததும் நினைவிருக்கலாம்.

சாலை சீரமைப்பு
இதனிடையே, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சாலை மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதை பொங்கலுக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.

கழிவறைகள்
மேலும், கோயம்பேடு பூ மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் ரூ.1.50 கோடி செலவில், கூடுதலாக பல கழிவறைகள் கட்டப்பட்டுவருகின்றன. அந்த கழிவறைகள், ஜனவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்றும், அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications