காவு வாங்கும் மெட்ரோ ரயில்... கிரிதருக்கு காத்திருந்த எமன்... கதறும் கர்ப்பிணி மனைவி
சென்னை: அலுவலகத்திற்கு செல்லும் போது பெற்றோரிடம் விடைபெற்ற கிரிதருக்கு தெரியாது அதுதான் அவர்களை கடைசியாக பார்ப்பது என்று... வழக்கமான பாதைதான்... தலையில் பாதுகாப்புக்கு ஹெல்மெட் அணிந்து இருந்தும் மெட்ரோ ரயில் பணிக்காக போடப்பட்டிருந் இரும்பு சாரம் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கிரிதர்.
பலியான கிரிதர் பொறியியல் பட்டதாரி. 32 வயதே ஆகும் இவர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார். காலையில் வீட்டிலிருந்து விடை பெற்றுக்கொண்டு அலுவலகம் சென்ற மகன் அரை மணிநேரத்தில் உயிரிழந்து விட்டானே என்று கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
சென்னையில் நடைபெற்று வரும் இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை பல தொழிலாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே பிள்ளை
சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த கிரிதர், தனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. நல்ல வேலையில் இருந்த கிரிதர், புதிதாக வீடு வாங்கிய பிறகே, திருமணம் செய்துள்ளார் கிரிதர்.

கர்பிணி மனைவி
இவருக்கு திருமணமாகி இன்னும் ஓராண்டு கூட நிறைவுறவில்லை என்கின்றனர் உறவினர்கள். கிரிதரின் மனைவி உத்ராவிற்கு சமீபத்தில்தான் வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

காத்திருந்த எமன்
வழியில் எமன் காத்திருப்பது தெரியாமல் வழக்கம் போல் நேற்று காலையில் அலுவலகத்திற்கு கிளம்பியுள்ளார். வழியில் எமன் காத்திருக்கிறான் என்று அப்போது அவருக்கு தெரியாது. கத்திபாரா பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது மெட்ரோ ரயில் பணிக்காக மேலே ஏற்றப்பட்ட இரும்பு சாரம் ஒன்று திடீரென கீழே விழுந்து கிரிதரின் உயிரை பறித்துக்கொண்டது.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கிரிதரின் திடீர் மரணம், அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது. உரிய பாதுகாப்பு வழிமுறைகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொள்ளாததால், ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இன்று கேள்விக் குறியாக்கியுள்ளது.

தொடரும் விபத்துக்கள்
இது முதல் விபத்தல்ல... மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர் முதன் முதலாக வடபழனி அருகே இரும்பு கம்பி ஒன்று வாகனம் மீது விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதில் வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசாமாக உயிர் தப்பினர்.

தொழிலாளர்கள் மரணம்
கீழ்ப்பாக்கம் அருகே இரும்பு ராட்டினம் அறுந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பின்னர் அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவந்த இடத்தில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சுரங்கம் தோண்டும் போது
சைதாப்பேட்டையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். மக்களின் வசதிக்காக கொண்டுவரப்பட்ட இந்த மெட்ரோ ரயில் பணி முடியும் முன்னர் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறதோ தெரியலையே?












Click it and Unblock the Notifications