இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி
சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார். இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மெட்ரோ ரயில் குழந்தை
முதன் முதலாக ரயிலை இயக்கிய பெண் டிரைவர் பிரீத்தி கூறுகையில்,'' மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்றார்.

ரயில் டிரைவர் பணி
முதலில் எனக்கு புறநகர் ரயில் இயக்கும் வேலையில் சேரதான் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே மெட்ரோ ரயிலில் வேலை கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மகளால் மகிழ்ச்சி
28 வயதாகும் ப்ரீத்தி சென்னை அரசு தர்மாம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துள்ளார். தனது மகள் மெட்ரோ ரயில் இயக்குவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ப்ரீத்தியின் தந்தை அன்பு கூறியுள்ளார். இதற்காக தனக்கு முதலில் கிடைத்த பணியையும் விட்டுவிட்டு இந்த வேலைக்கு வந்ததாக கூறியுள்ளார்.

மெட்ரோ ரயில்கள் இயக்கம்
இதேபோல மற்றொரு டிரைவர் ஜெயஸ்ரீ கூறுகையில், "பரீட்சாத்த முறையில் முதலில் நாங்கள் பணிமைனைக்குள்ளேயே மெட்ரோ ரயிலை இயக்கி பழகினோம். அதில் சிறப்பாக செயல்பட்டதால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க நியமிக்கப்பட்டோம் என்றார்.

டிரைவர் இல்லாத ரயில்கள்
உலகில் பைலட்டுகளே இல்லாத மெட்ரோ ரயில்களும் உள்ளன. அது போன்ற மெட்ரோ ரயில்களும் விரைவில் சென்னையில் ஓட வாய்ப்பிருக்கிறது. முன்னதாக தற்போது டிரைவர்கள் இயக்கும் மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications