வற்றும் சென்னை ஏரிகள் – கிருஷ்ணா நீர் கேட்டு ஆந்திராவிற்கு தமிழகம் கடிதம்
சென்னை: சென்னை நகர மக்களின் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் கிருஷ்ணா அணையின் தண்ணீரைக் கேட்டு தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை நகரத்தைப் பொறுத்த வரை குடிநீர் விநியோகம் புழல், வீராணம் போன்ற ஏரிகளில் இருந்துதான் பெரும்பாலும் கிடைத்து வருகின்றது. இதுபோக இரண்டு இடங்களில் கடல் நீரில் இருந்து குடிநீர் திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றது.
தற்போது குடிநீர் ஆதார ஏரிகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வறண்டு வருவதால் வீராணம் ஏரி தண்ணீர்தான் கை கொடுக்கிறது.
ஏரிகளில் தண்ணீர் கடுமையாக குறைந்து வருகின்ற காரணத்தால் ஆந்திர அரசுக்கு தமிழகஅதிகாரிகள் கடிதம் எழுதி ஜூலை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் மழை பெய்யாதது போல் ஆந்திராவிலும் இப்போது மழை இல்லை. இதனால் ஆந்திர அதிகாரிகள் ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகுதான் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை ஏரிகளில் 3 மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. கிருஷ்ணா நீர்வரத்து கிடைத்தால்தான் அதன்பின்னர் சமாளிக்க முடியும் என்று தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications