பெரும்பாலான மழை கடலில் பெய்துவிட்டது.. சென்னைக்கு மிதமான மழையே.. வானிலை மையம்
பெரும்பாலான மழை கடலிலேயே பெய்துவிட்டது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் மிதமான மழை பெய்யவே வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு என்று நார்வே மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பருவமழையின் ஆரம்பக் கட்டத்திலேயே அதிக மழை பெய்து விட்டதால் சென்னையே வெள்ளக் காடாக காட்சியளித்தது.
இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 2000 சதுர கி.மீ. பரப்பளவில் மேகக் கூட்டங்கள் இருந்தது. ஆனால் காற்றின் வேகமும் திசை மாற்றம் காரணமாக நடுக்கடலிலேயே நேற்று மழை பெய்துவிட்டது. எனவே நிலப்பகுதிகளில் மழை பெய்யவில்லை.
இருப்பினும் இந்த தாழ்வுநிலையானது அதே இடத்தில் இன்றும் நிலவி வருகிறது. இதனால் வடதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.