மெட்ராஸ்.. எம்மாம் பெரிய மெட்ராஸ்.. பெங்களூரு, ஹைதராபாத்தை விஞ்சி.. 8878 ச.கி.மீட்டருக்கு விரிகிறது!
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை விட பெரிய நகரமாக உருமாறுகிறது சென்னை மெட்ரோ நகரம். இப்போதுள்ள பரப்பளவை காட்டிலும், ஏழு மடங்கு விரிவடைந்து 8,878 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பெரும் நகரமாக மாறுகிறது சென்னை.
சென்னை: பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை விட பெரிய நகரமாக உருமாறுகிறது சென்னை மெட்ரோ நகரம். இப்போதுள்ள பரப்பளவை காட்டிலும், ஏழு மடங்கு விரிவடைந்து 8,878 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பெரும் நகரமாக மாறுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்தை இணைப்பதால், 8,878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெருநகரமாக மாறுகிறது.
சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு திட்டத்தை வெளியிட்டது.
அதன்படி, வருகிற 2026-ம் ஆண்டில் மக்கள் தொகை 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் வளர்ச்சியை சமநிலைப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கவும் புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
அதிவேக வளர்ச்சியில் சென்னை புறநகர்
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெருமளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் அங்கும் மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இது போன்ற காரணங்களால் சென்னையின் புறநகர் பகுதியும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
விரிவடையும் சென்னை எல்லை
இதனால் அங்கு ஒழுங்கற்ற முறையில் உருவாகும் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டிய நிலை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரின் எல்லையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையுடன் 2 மாவட்டங்கள் இணைப்பு
சென்னையை பெருநகரமாக்க திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சேர்க்கப்படுகிறது.
சட்டசபையில் அறிவிப்பு
இத்தகவலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று சட்டசபையில் அறிவித்தார். இந்த விரிவாக்கத்தின் மூலம் சரிசமமான வளர்ச்சியும், ஒருங்கிணைந்த நகர வளர்ச்சியும் ஏற்படும் என்றார்.
8,878 சதுர கி.மீ. பரப்பு
சென்னை பெருநகரம் தற்போது 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டர் ஆக விரிவடையும். இதன் மூலம் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.
தென்மாநிலத்தின் பெரிய நகரம்
இத்திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு சென்னை பெருநகரை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இதே போன்று விரிவாக்கம் செய்யப்பட்டு முறையான வளர்ச்சி பெற்றுள்ளன.
மும்பையைவிட பெரியது சென்னை
நாட்டில் உள்ள பெருநகரங்களான மும்பை 4,354 சதுர கி.மீட்டர் பரப்பளவு உள்ளது.
ஹைதராபாத் 7,100 சதுர கி.மீட்டர் பரப்பளவும், பெங்களூர் 8,005 சதுர கி.மீட்டர் பரப்பளவும் கொண்டுள்ளன. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பெரிய பெருநகரமாக சென்னை மாறுகிறது.