என்ன சார் இப்படி போட்டுட்டீங்க.. சென்னை மயிலாப்பூர் மக்களை கவலையில் ஆழ்த்திய புதிய சாலை!
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.மடம் சாலையை சீரமைக்கும் போது, சென்னை மாநகராட்சி சாலையின் உயரத்தை உயர்த்தியுள்ளது. பல இடங்களில், சாலையின் உயரம் நடைபாதைகளுக்கு இணையாக உள்ளது. இது மயிலாப்பூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் ஆர்கே மடம் சாலையில் சாலை அமைக்கும் பணி அண்மையில் நடந்தது . பழைய சாலைகளை சரியாக அகற்றாமல், அதன்மேலேயே புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால்,கட்டிடங்கள் பள்ளத்தில் இருப்பது போல் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர் வெங்கட்ராமன் கூறுகையில், சாலை அமைக்கும் பணி தரமற்ற வகையில் உள்ளது. புதிய சாலை அமைத்த பிறகு சாலையின் உயரம் அதிகரித்துள்ளது. அடுத்த 15 வருடங்களில் இப்படி உயர்ந்த சாலைகளால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் நள்ளிரவில் பலமுறை சாலைகளை அமைக்கும் போது ஆய்வும் செய்துள்ளனர். அப்படி இருந்தும் சாலையின் உயரம் அதிகமாகவே இருந்துள்ளது என்று புகார் சொல்கிறார்கள் மக்கள். புதிய சாலை அமைக்க பழைய சாலையின் மையப் பகுதியை 80 மிமீ ஆழத்துக்கு கரைக்க வேண்டும், இடது மற்றும் வலது பக்கங்களை 40 மிமீ அளவுக்கு கரைக்க வேண்டும். அதன்பின்னர் இதே அளவில் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் இப்படி தான் சாலைகள் அமைக்கப்படுமாம்.ஆனால் சாலைகள் நடைபாதை அளவிற்கு உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ, தண்ணீர் செல்வதற்கான சாய்வு வசதிகள் இல்லை எனறும் இதனால் அதனை சரி செய்ய சாலையின் உயரத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது என்றும் கூறினார்கள். சாலையின் உயரம் இப்போது உள்ள இதே அளவில் பராமரிக்கப்படும், எதிர்காலத்தில் அதிகரிக்கப்படாது என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் உறுதியளித்தார்.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், சாலையின் உயரத்தை அதிகரிப்பதில் எந்த காரணமும் இல்லை. "சில அங்குலங்கள் கூடுதலாக கரைத்து புதிய சாலைகளை போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது, தரமில்லாத வகையில் அமைத்த ஒப்பந்ததாரரை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சாலைகளின் உயரம் அதிகரித்துள்ளதால், நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து, அருகில் உள்ள கடைகளை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications