மக்கள் திறந்த போரூர் ரவுண்டானா மேம்பாலத்தை ஜூன் 25ல் அரசு திறக்கப் போகிறதாம்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டு கடுப்பாகி மக்களாகவே திறந்து பயன்படுத்திய போரூர் மேம்பாலத்தை ஜூன் 25ம் தேதி முதல்வர் திறந்து வைப்பார் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 7 ஆண்டுகளாக கட்டப்பட்ட சென்னை போரூர் ரவுண்டானா மேம்பாலத்தை மக்களே திறந்தனர். மக்கள் திறந்த பாலத்தை மீண்டும் வரும் 25ம் தேதி முதல்வர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை பூவிருந்தவல்லி, மவுண்ட் சாலை, குன்றத்தூர் சாலை, ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சந்திப்பாக விளங்கும் போரூர் ரவுண்டானா அருகே மேம்பாலம் கட்டப்பட்டது. 2010ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மேம்பாலப் பணி ஆட்சி மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வைத்த முக்கிய கோரிக்கையின் அடிப்படையில் தொடர் வலியுறுத்தல் காரணமாக 2015ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேம்பாலப் பணிகள் தொடங்கியது.

7 ஆண்டாக கட்டப்படும் பாலம்
2010 முதல் 7 ஆண்டுகள் நிறுத்தி நிறுத்தி கட்டப்பட்ட போரூர் ரவுண்டானா மேம்பாலப் பணிகள் முடிந்த போது மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை சென்னை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் போரூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்களே திறந்தனர்
இதனால் கடுப்பான வாகன ஓட்டிகள் தாங்களாகவே மேம்பாலத்தை திறந்து செல்ல ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரமாக இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் பறந்து சென்றன. போக்குவரத்து போலீசாரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்நிலையில் மக்களுடைய வாக்குவாதத்திற்கிடையே போலீசார் மீண்டும் தடுப்புகள் அமைத்து மேம்பாலப் பாதையை மூடினர்.

சர்ச்சை
மேம்பாலப் பணிகள் முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து கொதிப்படைந்த மக்களே பாலத்தை திறந்து பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று போரூர் ரவுண்டானா மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனர்.

25ம் தேதி திறப்பு விழா
இதனையடுத்து மேம்பாலம் போக்குவரத்துக்கு தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருகிற 25ம் தேதி முதல்வர் போரூர் ரவுண்டானா மேம்பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் திறந்து பயன்படுத்திய பாலத்தை மீண்டும் நல்ல நாள், நேரம் பார்த்து திறக்க உள்ளது அரசு.











Click it and Unblock the Notifications