முழு அடைப்பின் போது சென்னை புஹாரி ஓட்டலில் புகுந்து தாக்குதல்... திமுகவினர் 4 பேர் கைது!
முழுஅடைப்பின் போது சென்னையில் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக திமுகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி நடந்த முழு அடைப்பின் போது ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் விடுக்கப்பட்ட முழுஅடைப்பிற்கு அரசியல் கட்சியினரும் வணிக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
முழுஅடைப்பு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தடையை மீறி போராட்டம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே சென்னையில் முழுஅடைப்பின் போது புஹாரி ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் இளங்கோவன் உள்பட 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.