அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: 17 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல்.. துருவி, துருவி விசாரிக்க முடிவு
Recommended Video

சென்னை: சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்கள் 17 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அயனாவரம், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசிக்கும் காது கேட்காத மாற்றுத்திறனாளி சிறுமியை அதே குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர், செக்யூரிட்டிகள் உள்பட 17 பேர் கடந்த 7 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது.

கீழ்ப்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 17 பேரை கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் 17 பேரை வருகிற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டு இருந்தார்.
புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் வைத்து இவர்களை வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராகுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, நேற்று புழல் சிறையில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டுகள் கலைபொன்னி, ரோகித்துரை, சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், ஜெயிலர் உதயகுமார், சிறுமி மற்றும் உறவினர்கள் முன்னிலையில், 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டியிருந்தார்.
இதையடுத்து 17 பேரையும் விசாரிக்க வசதியாக போலீஸ் காவல் தருமாறு காவல்துறை சார்பில் மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதையேற்று இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் 17 பேரையும் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
கைதிகளிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications