சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யலாம் – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலையிலிருந்து மதியம் வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது.
மாலையில் பரவலாக மழை:
மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான மழை பெய்தது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தப்படி சென்றதை காணமுடிந்தது.
மழைநீர் தேக்கம்:
தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை விடவும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றன.
பதிவான மழை அளவு:
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டத்தில் தலா 2 செ.மீ மழையும், தூத்துக்குடியில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
வெப்பச்சலனம்:
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, "வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இடியுடன் கூடிய மழை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் தெளிவாக காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளனர்.