வெள்ளம் எதிரொலி: காத்து வாங்கிய சென்னை மெட்ரோ ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்
சென்னை: வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னை ஆலந்தூர்-கோயம்பேடு இடையே செல்லும் மெட்ரோ ரயில்களில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கனமழையால் சென்னை வெள்ளக்காடாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆங்காங்கே தவிக்கும் மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் அதன் குறுக்கே உள்ள 3 பாலங்கள் மூழ்கும் நிலையில் உள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் வெள்ளத்தால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மின்வெட்டு காரணமாக ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் காசி தியேட்டர் மற்றும் அசோக் பில்லர் அருகில் உள்ள உதயம் திரையரங்க வளாகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்றைய படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவித்த மக்கள் அதை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் மழையால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளதால் இத்தனை நாட்களாக காற்று வாங்கிய ஆலந்தூர்-கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயிலில் தற்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
வெள்ள நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை மிகவும் உதவியாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications