சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தேங்கிய மழை நீர்- விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியது. விமானங்கள் புறப்படுவதிலும், இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
சென்னை: சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியதால் 12 விமானங்கள் புறப்படுவது, இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நீரை வெளியேற்றிய பின்னரே விமானங்கள் புறப்பட்டு சென்றன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் புதன்கிழமையன்று நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. வியாழக்கிழமையன்றும் மழை பெய்தது. சென்னை விமான நிலையத்தில் சுமார் அரை மணிநேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய வெளிநாட்டு விமானங்களும், கொல்கத்தா, திருச்சி உள்பட பல உள்நாட்டு விமானங்களும் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதையடுத்து, மழை சிறிது ஓய்ந்ததும், ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீரை ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றிய பின்பு, இந்த விமானங்கள் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதேபோல், சென்னைக்கு டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் நீண்டநேரம் வானிலேயே வட்டமடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக தரையிறங்கின.
சென்னையில் மிக பலத்த மழை எதுவும் பெய்யவில்லை. சுமார் அரை மணி நேரம் பெய்த மிதமான மழையால் மொத்தம் 12 விமானங்கள் தாமதமாக வந்தன. தாமதமாக புறப்பட்டும் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
விமானம் புறப்படுவதில் தாமதம் ஏன் என்று கேட்டு பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோசமான வானிலை காரணமாகவே விமானங்கள் தாமதம் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு சமாதானம் அடையாத பயணிகள், அரை மணிநேர சிறிய மழைக்கே பல விமானங்கள் தாமதம் ஆனது. கடந்த ஆண்டை போல் பலத்த மழை பெய்தால் இந்த ஆண்டும் சென்னை விமான நிலையம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும். பருவ மழை வருவதையொட்டி அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் சரிவர எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
கடந்த நவம்பர் மாத இறுதியிலும், டிசம்பர் மாத துவக்கத்திலும் கனமழை கொட்டியது. இதில் விமான நிலையம் கடும் பாதிப்புக்கு ஆளானது. 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அதே நிலை ஏற்பட்டு விடுமோ என்பது பயணிகளின் அச்சமாக உள்ளது.












Click it and Unblock the Notifications