மழையால் வேலை பாதிப்பு.. சென்னை ஊழியர்களை பெங்களூருக்கு டிரான்ஸ்பர் செய்த ஐடி நிறுவனங்கள்
சென்னை: தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இடர்பாடுகளால் இம்சையை சந்தித்த சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெங்களூருக்கு இடம் மாற்ற தொடங்கியுள்ளன.
கடந்த பல நாட்களாக பெய்த கனமழையால், ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள தென்சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மழை அதிகமாக பெய்தபோது ஐடி நிறுவனங்கள் பல விடுப்பு அறிவித்திருந்தன.
இதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பணியை முடித்துகொடுக்க முடியாமல் சென்னையிலுள்ள ஐடி நிறுவன கிளைகள் தவிக்கின்றன.
பணிகள் மாற்றம்
இதனால், சில முக்கிய பணிகளை ஐபிஎம், காக்னிசன்ட், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் பெங்களூருக்கு மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஐடி
இந்தியாவில் உள்ள 30 லட்சம் தொழில்நுட்பப் பணியாளர்களில், 15 சதவீதம் பேர் சென்னையில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
பணியாளர்கள் டிரான்ஸ்பர்
முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம்-க்கு இந்தியாவில் ஒரு லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 5-ல் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகின்னறனர். இந்த நிறுவனத்தின் முக்கியப் பணிகளை மட்டுமின்றி, பணியாளர்களையும் பெங்களூருக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
சில ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அனுமதி அளித்துள்ளது. விப்ரோ நிறுவனத்திற்கு சென்னையில் 18,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இன்போசிஸ் நிறுவனத்திற்கு சென்னையில் 25,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலான ஊழியர்களை இந்த நிறுவனம் பெங்களூருக்கு இடம் மாற்றியுள்ளது.