ஈசிஆர் கடற்கரையில் அத்துமீறும் பெண்களை குறிவைத்து பலாத்காரம்: கைதான வாலிபர் வாக்குமூலம்
சென்னை: கிழக்கு கடற்கரை பகுதிகளில் காதலர்களுடன் அத்துமீறும் பெண்களை குறிவைத்து பலாத்காரம் செய்து வந்ததாக நீலாங்கரை கடற்கரை பலாத்கார சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அருண் மொழி என்ற இளையராஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த இருவர் காதலித்து வந்தனர். கடந்த 22ம் தேதி மாலை நீலாங்கரை அடுத்த அக்கரை கடற்கரையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது டிப்டாப் உடையில் பைக்கில் வந்த ஆசாமி, நான் போலீஸ்காரர் என கூறி காதலர்களை மிரட்டியுள்ளார். பின்னர் விசாரணைக்கு வரும்படி தனது பைக்கில் இளம்பெண்ணை அழைத்து சென்று தனி அறையில் அவரை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
காதலனின் புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சோழிங்கநல்லூர் கருணாநிதி சாலை சுங்கச்சாவடி அருகே பள்ளிக்கூட தெருவில் உள்ள விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்தபோது, பெண்ணை பைக்கில் வாலிபர் ஒருவர் கடத்தி சென்றது பதிவாகியிருந்தது.
இதை வைத்து அந்த வாலிபரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், காரைக்காலை சேர்ந்த அருண்மொழி (எ) இளையராஜா (29) என்பதும் சோழிங்கநல்லூர் பள்ளிக்கூட தெருவில் வாடகைக்கு இருப்பதும், காரைக்காலில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரைக்காலுக்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்து நீலாங்கரை கொண்டு வந்தனர்.
மேலும் விசாரணையில், டிபார்ம் படித்துள்ள அருண்மொழி, சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் மருத்துவ பிரிவில் வேலை செய்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். குடும்பத்தை சொந்த ஊரில்விட்டுவிட்டு இவர் மட்டும் சென்னையில் தங்கியிருந்தது வேலை செய்து வந்துள்ளது தெரியவந்தது.
போலீசில் அருண்மொழி அளித்துள்ள வாக்குமூலம்:
வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் பைக்கில் சென்று கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைக்கு செல்வேன். அங்கு காதல் ஜோடி, கள்ளக்காதலர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவதை மறைந்து இருந்து பார்த்து ரசிப்பேன். இதுபோல் கடந்த 22ம் தேதி இந்த காதலர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த பெண் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபடுவதை பார்த்ததும் எனக்கும் ஆசை ஏற்பட்டது. இதனால் அவர்களிடம் சென்று போலீஸ் என கூறி மிரட்டினேன்.
அந்த வாலிபர் என்னை பார்த்து பயந்து கெஞ்சினார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்ணை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் என கூறினேன். அதற்கு அந்த வாலிபர் நானும் வருகிறேன் என கூறினார். நீ தேவையில்லை என கூறி அந்த பெண்ணை மட்டும் பைக்கில் ஏற்றிச்சென்றேன்.
பின்னர் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கொண்டு சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு செம்மஞ்சேரி காவல்நிலையம் அருகில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன்.
நான் முதல்முறையாக ஒரு பெண்ணை இப்படி ஏமாற்றி கூட்டிச் சென்றபோது, அந்த பெண் பாதியிலேயே குதித்து தப்பிவிட்டார். இதனால் எனது முதல் பலாத்கார முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முயற்சியில்தான் வெற்றி கிடைத்தது. இவ்வாறு அருண்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார்.