வட கிழக்குப் பருவ மழை.. சென்னைக்கு 45% அதிகம்... தமிழகத்திற்கு 100 மி.மீ குறைவு!
சென்னை: தமிழகத்தில் கடந்த 28-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதுவரை சராசரியாக தமிழ்நாட்டில் 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது வழக்கமான சராசரியை விட 100 மி.மீ குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004 முதல் 2011 வரை இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது. ஆனால் 2012-ல் 16 சதவீதம் குறைவாகவும், 2013-ல் 33 சதவீதம் குறைவாகவும், 2014-ல் 2 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

இதில் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை சென்னை உள்பட வட மாவட்டங்களில் அவ்வளவாக பெய்யவில்லை.
இதனால் சென்னையில் உள்ள ஏரிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. சோழவரம் ஏரி 6 மாதமாக வறண்டு கிடந்தது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளிலும் தண்ணீர் குறைந்து சொற்ப அளவே காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உள்பட தமிழகம் எங்கும் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன. வயல்வெளி கிணறுகள், குடிநீர் கிணறுகள் அனைத்தும் இப்போது பெய்து வரும் மழையில் நிரம்பி விட்டன. இதனால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் சராசரி மழை அளவு 450 மி.மீட்டர் ஆகும். இதுவரை சராசரியாக தமிழ்நாட்டில் 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது வழக்கமான சராசரியை விட 100 மி.மீ குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 700 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 45 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல்சின்னம் காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications